Saturday, May 7, 2011

கோடு சாமங்களின் கவிதை

கோடு சாமங்களின் கவிதை

உலகத்து இருளையெல்லாம்
ஒன்றாயிழைத்து
வரையப்பட்டது அந்தக்கோடு

பாதங்களுக்கு முன்னே
நீண்டு விரிந்திருந்தது
இருத்தலையும் கடத்தலையும்
இருகூறாய்ப் பிரித்த கோடு
அறத்தின் கூர்நகங்களாய்
காற்றில் அலைபாயும் முட்களோடு

இரவு அடைகாக்கிறது
வாழ்தலின் இரகசியத்தை
கோடு அடைகாக்கிறது
இரகசியத்தின் வாழ்வை

கோடு சாமங்களின் கவிதை
இரகசியத்தின் புதைமேடு

பாம்புகள் இரைதேடும்
வனாந்தரத்து இருளூடே
மினுக்கட்டான் பூச்சிகளாய்
புதைந்தொளிர்கின்றன
கங்குகள்

சாம்பலிலிருந்து கிளர்ந்தெழுந்தது
தனிமையை ஊடறுத்து
இரவின் பாடல்

பற்றி எரிந்தது கோடு
அந்தகாரத்தின் இடுக்கில்
கசியும் கருந்திரவத்தை
முகர்ந்தவாறே

நெருப்பு விழுங்கிய பாம்பாய்
நெளிந்து நெளிந்து
வெந்து தணிந்தது கோடு
இருளோடு

சாம்பல் பூசிய விடியல்
பறைசாற்றியது
இரவு தீக்குளித்த கதையை

No comments:

Post a Comment