Wednesday, December 1, 2010

பாட்டி சொல்லாத கதை

பாட்டி சொல்லாத கதை

என் ஆர்ட்டிக் வெளியிலும்
எங்கோ அடிமூலையில்
சுவர்க்கோழி இரைச்சலாய்
உன் கொக்கரிப்பு
இருளில் தொலைந்த நிழலாய்
ஈரவிழிகளோடு என் இருப்பு
அதில் நீ உப்புச் சுவைத்தாய்
மூச்சு முட்டும் உன்
ஆல்கஹால் அரவணைப்பில்
கருகிக்கிடந்த பொழுதுகளைக்
கிளறிப் பார்க்கிறது மனம்
கிழித்தெறிந்த தேதிக் கழிவுகளில்
எலிசெத்த நாற்றமாய் உன்பதிவு
சுயம் உணர்ந்த பொழுதொன்றில்
கட்டுடைத்து வெளியேறினேன்
உன் கட்டுக்கதைகளில்
காற்றில் பறந்தது பத்தினிப்பட்டம்
ஆக்சிஜன் வெளியில் சிறகசைத்தேன்
பணியிடமாற்றம் என்று பரிகசித்தாய்
கூடுதிரும்பச் சொன்னது தாய்மரம்
கூண்டு தயாரிப்பவர்களின் நேச வலைப்பின்னல்
கடந்து நடந்தேன் கவனமாய்
கால்களை விலங்கிட்டது காலச்சிறை
சுதந்திரம் என்பது தனிமைப்படல்
பாட்டி சொல்லாத கதை
உன் மாற்றமில்லாக் கூட்டில்
சிறகறியா மற்றொரு பறவை
கால்மேல் கால்போட்டு வீற்றிருக்கிறது
உன் அதிகாரம் காலங்காலமாய்
பாதையெங்கும் துளைக்கும்
பார்வைகளை களையெடுகின்றது
என் மையூறும் ஆறாம்விரல்
நெஞ்சாங்குழியில் நெருடுகிறது
உன் கொக்கரிப்பும் என் அவமதிப்பும்
உணர்த்தவேண்டும் பறவைகளுக்கெலாம்
சுயத்தையும் சிறகையும்